போதைப் பொருள் கடத்தல் வழக்கில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்படட ஈரான் நாட்டைச் சேர்ந்த ஆறு பேருக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
“ஈரான் நாட்டைச் சேர்ந்த ஆறு பேர் போதைப் பொருட்களைக் கடத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு மரண தண்டனையை வழங்கியது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது அதை நீதிமன்றம் நிராகரித்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் ஆறு பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.” என சவுதி அரேபியாவின் உள்விவகார அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இந்த தண்டனையானது இஸ்லாமிய சட்டத்தின்படி நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டின் குடிமக்களை போதைப்பொருளின் பிடியிலிருந்து காக்கும் நோக்கத்தில் கடும் தண்டனைச் சட்டம் இங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.” என அந்த ஊடக சந்திப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் இந்த தண்டனை எப்போது நிறைவேறறப்பட்டது என்பது குறித்த விடயங்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு சவுதியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஈரான் வெளிவிவகார அமைச்சு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இதுதொடர்பாக ஆராய்வதற்காக சவுதிக்கு தமது பிரதிநிதிகள் குழுவை அனுப்ப ஈரான் தீர்மானித்துள்ளது.
