மாரி செல்வராஜுக்கு ஆதரவாக வடிவேலு கருத்து

தமிழகத்தின் மழை வெள்ளம் காரணமாக சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே நெல்லையில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை அமைச்சர் உதயநிதி பார்வையிடச் சென்ற நிலையில், மாரி செல்வராஜும் அவருடன் இருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அமைச்சர் உடனான ஆய்வில் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு என்ன வேலை? என்று சிலர் விமர்சித்து வந்தனர்.

அதற்கு மாரி செல்வராஜும் “என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல. நீங்கள் யாரென்று உங்களுக்கு நிரூபிப்பதுதான்” என்று தன் மீதான விமர்சனத்திற்கு தக்க பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் வடிவேலு இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். “ இந்த அரசாங்கம் இன்று மிகப்பெரிய சோதனைகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சென்னையில் புயல் வந்ததையும் பெரிய அரசியலாக்கி விட்டார்கள்.

இயக்குநர் மாரி செல்வராஜ் ஏன் அமைச்சருடன் சென்று பார்வை இடுகிறார் என்று கேட்கிறார்கள். அவருக்குத்தான் அவர் ஊரைப் பற்றித் தெரியும். அவர் ஊரில் வெள்ளம் வந்தால் அவர் போகக்கூடாதா?… அவர் போகதானே வேண்டும்.

உதயநிதி, கீதா ஜீவன் உள்ளிட பலரும் களத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள். நான் கூறுவதில் அரசியல் கிடையாது. எல்லோருக்கும் பங்கு இருக்கிறது. மக்கள் படுகிற கஷ்டங்களை உணர்ந்துதான் இந்த அரசாங்கம் வேலை செய்கிறது” என பேசியிருக்கிறார். (cinemavikatan.com)

Latest articles

Similar articles