இதுவொரு Fact Crescendo கதை
இலங்கையில் TikTok செயலியின் பயன்பாட்டைத் தடை செய்ய தீர்மானம் என கருத்து பரவும் வண்ணம் சமூகவலைத்தளங்களில் சில பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் இது குறித்த தகவல் போலியானது என Fact crescendo நிறுவனம் கண்டறிந்துள்ளது.
சமூகவலைத்தளங்களில் “TikTok செயலியின் பயன்பாட்டைத் தடை செய்ய உத்தேசித்துள்ள அரசாங்கம்! என்ற தலைப்பில்
#sooriyan #Hirunews #sooriyanfmnews #Albaniangovernment #intends #ban #TikTokapp #TikTok ” இம் மாதம் 22 ஆம் திகதி 2024 ஆம் ஆண்டு (22.12.2024) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்துள்ளதோடு மேலும் குறித்த பதிவின்கீழ் இடுகைகளை நாம் பார்த்தபோது பலரும் இது இலங்கை நாட்டில் மேற்கொண்ட தீர்மானம் என நினைத்து செய்து பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
முதலில் நாம் குறித்த செய்தியினை வாசித்த போது அது இலங்கையில் தடை செய்ய தீர்மானித்த முடிவு இல்லை என்பதுடன் இது அல்பேனிய நாட்டில் எடுத்த முடிவு என்பது கண்டறியப்பட்டது.
மேலும் நாம் குறித்த செய்தியை ஆய்வு செய்தபோது, அல்பேனிய அரசாங்கம், தமது நாட்டினுள் ஒரு வருடத்திற்கு டிக்டொக் செயலியின் பயன்பாட்டை எதிர்வரும் ஜனவரி முதல் தடை செய்வதற்கு உத்தேசித்துள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் எடி ரமா அறிவித்துள்ளார்.
குறித்த செய்தி பகிர்வின் போது அதில் அல்பேனிய என்ற நாட்டை குறிப்பிடாமல் பகிர்ந்தமையால் அது இலங்கை நாட்டில் எடுத்த முடிவு என்று பலரும் நினைத்து குறித்த பதிவிற்கு இடுகை செய்துள்ளமை காணக்கிடைத்தது.
மேலும் இலங்கை நாட்டில் தான் குறித்த தடை என நினைத்து சிலர் இதனை பகிர்ந்துள்ளமையும் காணக்கிடைத்தது.
இலங்கையில் இவ்வாறு எதும் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதா என நாம் ஆய்வினை மேற்கொண்ட போது அவ்வாறு எதுவும் மேற்கொண்டமைக்கான செய்திகள் எதுவும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை.
இது குறித்து மேலதிக தகவலை பெறுவதற்காக நாம் ஜனாதிபதி ஊடகப்பிரிவை நாம் தொடர்புகொண்டு வினவிய போது, இவ்வாறான தீர்மானம் எதுவும் மேற்க்கொள்ளவில்லை என தெரிவித்தனர்.
இதற்கமைய நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இலங்கையில் TikTok செயலியின் பயன்பாட்டைத் தடை செய்ய தீர்மானம் என பரவும் தகவல் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
