தமிழ் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை வரைய விசேட குழு நியமனம்!

இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை அரசாங்கம் தயாரிக்கும்போது சமர்ப்பிப்பதற்காக, தமிழ் தேசியப் பிரச்சினைக்கான ஒரு விரிவான அரசியல் தீர்வுத் திட்டத்தைத் தயாரிக்க ஒரு விசேட வரைவுக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு தொடர்பாக வடக்கு மற்றும் கிழக்கின் தமிழ் தேசியக் கட்சிகளுக்கிடையே ஒரு உடன்பாட்டை எட்டுவதற்காக, தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பின் கீழ் கொழும்பில் நேற்று (ஏப்ரல் 09) நடைபெற்ற இரண்டாவது கலந்துரையாடலில் அத்தகைய முதலாவது குழு நியமிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அந்தக் கட்சிகளின் தலைவர்களின் பங்கேற்புடன், தமது ஒருங்கிணைப்பின் கீழ் இக்கலந்துரையாடல் நடைபெற்றதாக தமிழ் சட்டத்தரணிகள் பேரவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகளுக்கான புதிய அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்கள் குறித்து கட்சிகள் இடையே ஏகமனதாக இணக்கப்பாடு எட்டப்பட்டதாக தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அடிப்படைக் கூறுகளை ஒரு பொதுவான நோக்கமாகக் கொண்டு, தமிழ் மக்களின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு விரிவான தீர்வுத் திட்டத்தைத் தயாரிக்க ஒப்புக் கொள்ளப்பட்டு, இதற்காக ஒரு சிறப்பு வரைவுக் குழு அமைக்கப்பட்டுள்ளதோடு, இதில் வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளும், ஒரு நிபுணர் குழுவும் அடங்குகின்றனர்.

மேலும், இந்த முன்னெடுப்பின் ஒருங்கிணைப்பாளர்களாக சட்டத்தரணிகளான ராணித ஞானராஜா மற்றும் மரியதாஸ் ஜூட் தினேஷ் ஆகியோர் செயல்படுவார்கள் தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவை அறிவித்துள்ளது.

இந்த நிபுணர் குழுவில் ஜனாதிபதி சட்டத்தரணி, கலாநிதி கே. கனக ஈஸ்வரன், பேராசிரியர் எம். சொர்ணராஜா, பேராசிரியர் என். செல்வகுமாரன், பேராசிரியர் வி. ரி. தமிழ்மாறன், மூத்த விரிவுரையாளர் என். சிவகுமார் மற்றும் கலாநிதி கே. குருபரன் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

மேலும், இந்த மாநாட்டில் பங்கேற்ற ஒவ்வொரு தமிழ் தேசிய அரசியல் கட்சியும், தங்கள் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உறுப்பினரை இந்த நிபுணர் குழுவில் நியமிக்க ஒப்புக்கொண்டுள்ளது.

தமிழ் மக்களின் இனப் பிரச்சினைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் இதற்கு முன்னர் தீர்வுகளையும் முன்மொழிவுகளையும் முன்வைத்திருந்தாலும், அனைத்து தமிழ் தேசியக் கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்குவது அவசியம் என இந்தக் கலந்துரையாடலில் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

அந்தச் சூழ்நிலையில், எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்புச் சட்டம் குறித்து கலந்துரையாடல்களை நடத்தினால், தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கட்சிகளின் கூட்டு நிலைப்பாடாக இந்த ஒருங்கிணைந்த அடிப்படைக் கட்டமைப்பு முன்வைக்கப்படும் என இந்த சந்திப்பில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் சட்டத்தரணிகள் பேரவை அறிவித்துள்ளது.

தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஒருங்கிணைப்பின் கீழ் புதிய அரசியலமைப்பு தொடர்பில் வடக்கு கிழக்கு மாகாண தமிழ்த் தேசிய கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான முதல் கலந்துரையாடல், 2026 மார்ச் 2 அன்று கொழும்பில் நடைபெற்றது.

Latest articles

Similar articles