அடிப்படை உரிமைகளை மீறிய அல்லது அவருக்கு எதிரான குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்ட அல்லது சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் எந்தவொரு அதிகாரியையும் பொலிஸ்மா அதிபராக நியமிக்க கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) வலியுறுத்தியுள்ளது.
நியமனச் செயற்பாட்டில் பொதுமக்களின் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், IGP நியமனம் வெளிப்படையான முறையில் செய்யப்பட வேண்டுமென அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பொலிஸ்மா அதிபர் நியமனத்தின் ஒப்புதலுக்கு முன், உறுப்புரை 41B அல்லது 41C இன் கீழ் நியமனங்களுக்கான பரிந்துரைகள் அல்லது ஒப்புதல்கள் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள், அரசியலமைப்பின் உறுப்புரை 41E (6) இல் வழங்கப்பட்டுள்ளபடி அரசியலமைப்புச் சபையால் தீர்மானிக்கப்பட வேண்டுமென கருதுவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறியதற்காக பொலிஸ்மா அதிபர் மற்றும் மூன்று பொலிஸ் அதிகாரிகளின் தனிப்பட்ட நிதியில் இருந்து மனுதாரருக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென்ற உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை மேற்கோள் காட்டி , அடிப்படை உரிமைகளை மீறும் எந்த அதிகாரியும் அல்லது குற்றவியல் வழக்குள்ள, அவருக்கு எதிராக சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருக்கும் நபர் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் நியமிக்கப்பட கூடாது என அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் அடுத்த நிரந்தர நியமனம், பொலிஸ் சேவையில் முன்னுதாரணமானதும், எவ்வித களங்கமும் அற்றதும், இலங்கை பொலிஸ் மீது பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கக்கூடியதுமான ஒரு அதிகாரியாக இருக்க வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. (tamilmirror.lk)
