சிங்கள-பௌத்த ஒற்றையாட்சி அரசில் தமிழ் மக்களுக்கு ‘நீதி இல்லை’

பௌத்த ஆதிக்கத்தைக் கொண்ட ஒற்றையாட்சி அரசிற்குள் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காமையே, தனிநாடு கோருவதற்கு காரணமாக அமைந்தது என, 22 வருடங்களுக்கு முன்னர் சுட்டுக் கொல்லப்பட்ட மூத்த தமிழ் ஊடகவியலாளர் ஒருவரின் நினைவேந்தலில் கலந்துகொண்ட தமிழ் மக்கள் பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“எங்களுடைய ஊடகவியலாளர்கள், நான் நினைக்கிறேன் 43-ற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதிலும் 27-ற்கும் மேற்பட்டவர்கள் என நினைக்கின்றேன். ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். எங்களுக்கு, கடத்தப்பட்டவர்களும் இல்லை, காணாமல் ஆக்கப்பட்டவர்களும் இல்லை, கொல்லப்பட்டவர்களுக்குரிய நீதியும் இல்லாத நிலையில், நாங்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றோம். இது தான் எமது நாட்டு மக்கள் (தமிழர் தாயக மக்கள்), இந்த அரசாங்கத்தில் மத்திய அரசின் ஒற்றையாட்சி, பௌத்த மேலாதிக்கப் பொறிமுறையிலிருந்து வாழ முடியாது, எங்களுக்குச் சமநீதி கிடைக்க முடியாது என்ற காரணத்திற்காகத்தான், அவர்கள், “எங்களைத் தனியாக விட்டு விடுங்கள்” என சிந்திக்கக்கூடிய ஒரு நிலைமை வந்தது என்னவென்றால், அந்தக்காலத்தில் அவர்கள் சமநீதி, சமத்துவமான ஒரு உரிமையை வழங்க முடியாது இருந்த விடயத்தைச் செய்தார்கள்.”

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சி காலத்தில், அரசாங்க இராணுவ சோதனைச் சாவடிக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்ட மூத்த ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 22-வது நினைவேந்தல் மட்டக்களப்பில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் இதனைத் தெரிவித்தார்.

2004 மே 31 ஆம் திகதி காலை மட்டக்களப்பில் உள்ள தனது அலுவலகத்திற்குச் சென்று கொண்டிருந்த போது, ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், பின்நாட்களில் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான கருணா தரப்பினர் மீதே, சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான மனித உரிமைகள் கண்காணிப்பகம் (HRW), குற்றம் சாட்டியிருந்தது.

கொழும்பிலிருந்து வெளியாகும் வீரகேசரி பத்திரிகையின் எழுத்தாளரும், தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (TMA) முன்னாள் உப தலைவருமான நடேசனின் நினைவேந்தலை தெற்கில் நடத்துவதற்கு, தெற்கைச் சேர்ந்த எந்தவொரு ஊடக அமைப்போ அல்லது நிறுவனமோ இம்முறையும் நடவடிக்கை எடுத்ததாக அறியக் கிடைக்கவில்லை.

இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூருவதற்காக மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கு முன்னால் நிறுவப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு முன், ஐயாத்துரை நடேசனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, சுடரேற்றி அவருக்கு அஞ்சலி செலுத்திய மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு ஊடக மையம் மற்றும் கிழக்கு மாகாண செய்தியாளர் சங்கம் ஆகியன, தென்னிலங்கை ஊடகவியலாளர்கள் சிலருடன் இணைந்து மே 31ஆம் திகதி முன்னெடுத்த போராட்டத்தின் போது, இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி கோரப்பட்டிருந்தது.

இதேவேளை, மூத்த தமிழ் ஊடகவியலாளர் ஐயாத்துரை நாடேசனை நினைவுகூறும் நிகழ்வு ஒன்றை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாண அலுவலகத்தில் நடத்தியிருந்தது.

மே 31, 2004

‘நெல்லை நடேசன்’ எனப் பிரபலமாக அறியப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன், 2004 ஆண்டு மே 31ஆம் திகதி காலை மட்டக்களப்பில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உப தலைவர் நடேசனின் படுகொலையைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல தமிழ் ஊடகவியலாளர்கள் தமது உயிர் பாதுகாப்புக் கருதி பிரதேசத்தை விட்டு வெளியேற அல்லது வெளிநாடுகளுக்குச் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

படுகொலை செய்யப்படும் போது ஐம்பது வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஐயாத்துரை நடேசன், வீரகேசரி பத்திரிகை, IBC தமிழ் உட்பட கனடாவின் சில ஊடக நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளராக பணியாற்றினார்.

மட்டக்களப்பில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட மூத்த ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் கொலை வழக்கை மீண்டும் ஆரம்பிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டக்களப்பு ஊடக மையம் மற்றும் கிழக்கு மாகாண செய்தியாளர் சங்கம் ஆகியன கடந்த கால அரசாங்கங்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்த போதிலும், இன்று வரையில் அது தொடர்பில் சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்ததாக அறியக் கிடைக்கவில்லை.

 

Latest articles

Similar articles