இதுவொரு Fact Crescendo கதை
பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு (2025) முதல் தைக்கப்பட்ட சீருடைகளை வழங்குவது தொடர்பில் கடந்த நாட்களில் சமூக ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டு வந்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையை அறியும் நோக்கில் Fact Crescendo நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
குறித்த செய்தியில் பாடசாலை மாணவர்களுக்கு தைக்கப்பட்ட சீருடைகளை வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டு கடந்த 2024.12.07 ஆம் திகதி தகவல் ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன் உண்மைத் தன்மை அறியாது பலரும் இது தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கத்தினால் பல சலுகைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை நாம் அறிந்த ஒரு விடயம். ஆட்சி மாற்றங்களின் போது அவை பல விதங்களில் வேறுபடுமே தவிர சலுகைகள் தொடர்ந்து வழங்கப்பட்டுக்கொண்டே இருக்கும் அதன் அடிப்படையில் பாடசாலை மாணவர்களுக்கான சீருடை என்பது கட்டாயமான ஒன்றாகவே திகழ்கின்றது.
அதன்படி கடந்த 2019 ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு சீருடைகளுக்கு பதிலாக அதனை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்கள் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் தைக்கப்பட்ட பாடசாலை சீருடைகளை மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.
கடந்த 6ஆம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய கைத்தறி கைத்தொழில் விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டே இந்த செய்திகள் வெளியாகியிருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் இந்த வருடம் சீனாவில் இருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளப்படவுள்ளதுடன். ஆனால் அடுத்த ஆண்டு முதல் துணிக்கு பதிலாக தைத்த சீருடைகளை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கை நெசவு மற்று ஆடை கைத்தொழில் நிறுவனத்தினால் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பிரகாரம் நெசவாளர்களின் பங்களிப்புடன் தைக்கப்பட்ட பாடசாலை சீருடைகளை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டிற்கு இன்னும் சிறிது நாட்களே இருக்கும் பட்சத்தில் மாணவர்களுக்கு தைக்கப்பட்ட சீருடைகளை வழங்குவது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது எனவே அது குறித்த தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தரவிடம் நாம் வினவினோம்.
இதன்போது 2025 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு தைக்கப்பட்ட சீருடைகள் வழங்கப்பட மாட்டாது எனவும், தைக்கப்பட்ட சீருடைகளை வழங்கும் செயற்திட்டம் காணப்படுகின்ற போதிலும் அதனை 2026 ஆம் ஆண்டளவிலேயே நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மற்றும் அறநெறி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்குவதற்கு தேவையான முழு துணியையும் நன்கொடையாக வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணங்கியுள்ளதாக 2024.11.06 ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது முன்னாள் அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை சீருடையின் மொத்தத் தேவை சுமார் 11.82 மில்லியன் மீற்றராகும் இதன்படி, நவம்பர் இறுதிக்குள் நாட்டில் முதல் கையிருப்பு பெறப்படும் என்றும், மீதமுள்ள இருப்பு டிசம்பரில் பெறப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, 2025ஆம் ஆண்டிற்காக கிடைத்த 100 சதவீதமான பாடசாலைச் சீருடைகள் தமது தலையீட்டின் மூலமே சீனாவிடமிருந்து நன்கொடையாக பெற்றதாக அண்மையில் தெரிவித்திருந்தார். சீன அரசாங்கம் 2023 ஆம் ஆண்டில் 70% மற்றும் 2024 ஆம் ஆண்டில் 80% பாடசாலை சீருடைகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சீன அரசாங்கத்தினால் 2025 ஆம் ஆண்டுக்கான சீருடைகள் நன்கொடையாக வழங்கப்படுவதனால் அரசாங்கத்திற்கு 6 பில்லியன் ரூபா மீதமாவதாகவும் முன்னாள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதன் போது குறிப்பிட்டார்.
