போரின் போதும் அதற்குப் பின்னரும் இலங்கையில் நடந்த பாலியல் வன்முறைகள் குறித்த தகவல்கள் அடங்கிய ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வெளியிடப்படுவதற்கு முன்னரே வழங்கப்பட்டமை குறித்து தனக்குத் தெரியாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு யுத்தத்தின் முடிவில் மோதல் நிலைமையில் முறைமைப்படுத்தப்பட்ட பாலியல் வன்முறை நிலவியதையும், இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக வகைக்கூறலை உறுதி செய்யத் தவறியதையும் ஆவணப்படுத்திய இந்த அறிக்கை தமக்குக் கிடைக்கவில்லை என அரசாங்கத்தின் மூத்த அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
உயர்மட்ட அமைச்சரவை அமைச்சர்களது மறுப்புக்கு மத்தியிலும் இலங்கையில் மோதல் நிலை சார்ந்த பாலியல் வன்முறைக்கான வகைக்க்கூறல் அறிக்கை முன்கூட்டியே அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாக ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியுள்ளது.
“வழமையான நடைமுறைக்கு அமைய இந்த அறிக்கை முன்கூட்டியே இலங்கை அரசாங்கத்திடம் பகிரப்பட்டு விட்டது” என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் (OHCHR) ஊடகப் பேச்சாளர் ஜெரமி லோரன்ஸ் தெரிவித்துள்ளார்.
மறுப்பு தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும் சுருக்கமான மின்னஞ்சலில் ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதிகள் அலுவலகத்துடன் அறிக்கையைப் பகிர்ந்துகொள்வது வழமையான நடைமுறையாகும் என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பேச்சாளர் உறுதிப்படுத்தினார். இந்த அறிக்கை 2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம்ம 13ஆம் திமதியன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
“இலங்கையின் ஆயுத மோதல் நடைபெறும்போதும் அதற்குப் பின்னரும் நிகழ்ந்த பாலியல் வன்முறைகள் வெறுமனே தனித்தனியான சம்பவங்களின் தொகுப்பல்ல. மாறாக, அது ஒரு திட்டமிடப்பட்ட, பரவலான மற்றும் முறைமைப்படுத்தப்பட்ட மீறல்களின் ஒரு பகுதியாகும்” என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கை கூறுகிறது.
அறிக்கை இணையதளத்தில் வெளியாகி ஒரு வாரத்திம் கடந்தபின்பும் நீதி மற்றும் சட்டவாட்சிக்குப் பொறுப்பான அமைச்சர்களும், ஐ.நா. சபையுடனான தொடர்பாடல்களைப் பெறுவதற்கான முதற்புள்ளியாக அமைகின்ற வெளிவிவகார அமைச்சும் தமக்கு அது கிடைக்கவில்லை அல்லது அதன் இருப்பு பற்றித் தெரியாது எனக் கூறியுள்ளனர்.
“அந்த அறிக்கை வெளிவிவகார அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றிருக்கலாம். அது யாருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்பது குறித்து எனக்கு இன்னும் உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் எனக்கு அந்த அறிக்கை கிடைக்கவில்லை. அறிக்கை உத்தியோகபூர்வமாகப் பெறப்பட்டதும் விசாரணை தேவைப்படும் விடயங்கள் இருக்கும் பட்சத்தில் தொடர்புடைய முகவர் நிலையங்களுக்குப் பரிந்துரைக்கப்படும்போது எம்மால் பதிலளிக்க முடியும்” என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இலங்கையின் பிரதான நாளிதழ்களில் ஒன்றுக்கு தெரிவித்திருந்தார்.
“ஐ.நா ஆவணங்கள் எமக்கு அறிவிக்கப்படும் ஒரு குறிப்பிட்ட செயன்முறை உள்ளது. வெளிவிவகார அமைச்சு அதனைப் பெற்று, பெரும்பாலும் வினவல்களை அது தொடர்பான அமைச்சுக்கு அனுப்புகிறது. அறிக்கை இருக்கிறது என்றால், வெளிவிவகார அமைச்சு இன்னும் எங்களுக்கு எதையும் பரிந்துரைக்கவில்லை,” என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால பதிலளித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் துஷார ரொட்ரிகோ, ‘தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட தடங்கல்’ காரணமாக ‘அமைச்சர்களுடன் தொடர்பாடல் நிகழாமை’ ஏற்பட்டுள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் நடத்திய ஆலோசனை அமர்வுகள் பல தசாப்த காலம் நிலவிய செயலற்ற தன்மை மற்றும் நிறுவன ரீதியான மறுப்புகள் காரணமாக தண்டனையிலிருந்து தப்பிப்பது இன்றியமையாதது என்ற ஒரு பரவலான நம்பிக்கை நிலவுவதை வெளிக்கொணர்ந்தது. உயிர்பிழைத்தவர்கள் நீதித்துறையின் மீது ஆழ்ந்த நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தினர், அதை அவர்கள் வகைக்கூறலுக்கான பாதையாகப் பார்க்காமல், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் ஒரு பொறிமுறையாகவே பார்க்கின்றனர்” என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தனது அறிக்கையில் கூறுகிறது.
இலங்கையின் மறுப்பானது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் மத்தியில் அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கமும் முந்தைய அரசாங்கங்களின் அதே பாதையை அடியொற்றி நடக்கக்கூடும் என்ற ஐயத்தை வலுப்படுத்தியுள்ளது. இலங்கையின் ஆயுத மோதலின் போதும் அதற்குப் பின்னரும் நிகழ்ந்த பாலியல் வன்முறை மற்றும் ஏனைய சர்வதேச குற்றங்களுக்காகக் குற்றஞ்சாப்ட்டப்பட்ட அரச தரப்பினருக்கு தண்டனையிலிருந்து தொடர்ந்து விலக்களிக்கும் அதே வழிமுறை மீண்டும் நிகழ்கிறது.
“ஐ.நா. வெளிப்படுத்தல்களை அங்கீகரிக்கத் தவறியமை, சர்வதேச சட்டத்தின் கீழான ஒத்துழைப்பு, உடனடி விசாரணை மற்றும் நல்லெண்ணக் கடமைகளை மீறுவதாகும்,” என உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச திட்டம் X தளத்தில் பதிவிட்டுள்ளது.
இலங்கையில் போர் நெருக்கடி சார்ந்த பாலியல் வன்முறைகள் குறித்து உயிர்பிழைத்த தமிழ் மக்களின் கண்ணோட்டங்களை ஆவணப்படுத்தும் அறிக்கையை ஜனவரி 15ஆம் திகதியன்று ITJP வெளியிட்டது.
68 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை ‘உரையாடலைத் தொடங்குதல்: மோதல் சார்ந்த பாலியல் வன்முறையிலிருந்து உயிர்பிழைத்த புலம்பெயர்ந்த தமிழர்களுக்கான நீதி மற்றும் இழப்பீட்டுத் தேவைகள்’ (Opening a Conversation: The Justice and Reparations Needs of Exiled Tamil Survivors of Conflict-related Sexual Violence) தற்போது ஐக்கிய இராச்சியத்தில் புலம்பெயர்ந்து வாழும் 50 ஆண்கள் மற்றும் பெண்களுடன் இரண்டு ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆலோசனையின் கண்டுபிடிப்புகளைக் கொண்டுள்ளது. போரில் உயிர்பிழைத்த பலரும், 2009 இல் முடிவடைந்த ஆயுத மோதலின் போதும் அதற்குப் பின்னரும் இலங்கை பாதுகாப்புப் படையினரால் வன்புணர்வு மற்றும் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் ஐ.நா. அறிக்கை பற்றிய அறிந்திருக்கவில்லை என மறுத்தபோதிலும், இலங்கையின் இராணுவம் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரித்துள்ளது.
இராணுவப் பேச்சாளர் வருண கமகே, “இராணுவத்திற்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும்” நிராகரித்ததுடன், அவற்றை எவ்வித அடிப்படையுமற்ற குற்றச்சாட்டுகள் எனக் குறிப்பிட்டார். பாலியல் வன்முறை உள்ளிட்ட போர்க்குற்றங்களில் கட்டளைப் பொறுப்பு தொடர்பாக சர்வதேச ரீதியாகத் தடைகளுக்கு உள்ளாக்கப்பட்ட முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, இலங்கை இராணுவம் ஒருபோதும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதில்லை என வலியுறுத்தியுள்ளார்.
“இராணுவத்துக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் நீண்டகாலமாக முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என ஜெனரல் சவேந்திர சில்வா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், குற்றச்சாட்டுகளை மறுக்கும் அதேவேளை, நேரடியாக ஜனாதிபதியின் கீழ் வரும் இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நிதானமாகப் பதிலளித்துள்ளது.
“இதன் பொருள் அறிக்கையின் அனைத்து உள்ளடக்கங்களையும் நாங்கள் மறுக்க விரும்புகிறோம் என்பதல்ல. அறிக்கையில் உள்ள விடயங்களை நாங்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக அணுகவில்லை,” என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் பிரிகேடியர் பிராங்க்ளின் ஜோசப் கொழும்பின் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
ஐ.நா. அமைப்புகள் மற்றும் ஏனைய தரப்பினரின் தொடர்ச்சியான பரிந்துரைகளுக்கு மத்தியிலும் அர்த்தமுள்ள சீர்திருத்தங்கள் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அத்துடன் உயிர்பிழைத்தவர்கள் தொடர்ந்து மௌனமாகத் துயரத்தில் உழல்கிறார்கள் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் குறிப்பிடுகிறது. இலங்கையில் தொடர்ந்து இடம்பெற்று வரும் மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் சபை, உறுப்பு நாடுகள் மற்றும் நன்கொடையாளர்கள் நீடித்த கவனத்தைச் செலுத்த வேண்டும் எனவும், தண்டனையிலிருந்து தப்பித்தல் மற்றும் குற்றங்களை மறுத்தல் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும், தொடர்ச்சியான அடக்குமுறைகளுக்கு மத்தியில் மௌனத்தை உடைத்தவாறு எழும் உயிர்பிழைத்தவர்களின் குரல்களுக்கு தளம் அமைத்துக்கொடுக்க வேண்டும்” எனவும் ITJP வலியுறுத்தியுள்ளது.
“தேசிய அதிகார மையங்கள் நடவடிக்கை எடுக்கத் தவறும்பட்சத்தில், சர்வதேச சமூகம் பொருத்தமான நிலைமைகளில் உலகளாவிய அல்லது எல்லை கடந்த அதிகார வரம்பைப் பயன்படுத்துவதன் மூலமும், சர்வதேச சட்டங்களுக்கிணங்க குற்றவாளிகளுக்கு எதிராக இலக்கு வைக்கப்பட்ட தடைகளை விதிப்பதன் மூலமும், அமைதி காக்கும் பணிகள் அல்லது இருதரப்பு ஒத்துழைப்புக்காக கருத்திற்கொள்ளப்படக்கூடிய நபர்களைக் கண்டறிவதன் மூலமும், உயிர்ப்பிழைத்தவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கு நீடித்த ஆதரவை உறுதி செய்வதன் மூலமும் வகைக்கூறல் முயற்சிகளை ஆதரிக்க வேண்டும்” என ஐ.நா. அறிக்கை பரிந்துரைக்கிறது.
Originally published by; thamilan.lk
