இலங்கையில் டெலிகிராம் (Telegram) செயலியைப் பயன்படுத்தி இடம்பெறும் இணையவழி வேலை குறித்த மோசடிகள் அதிகரித்துள்ளது. இந்த வருடம் மாத்திரம் 150ற்கும் அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இளைஞர்களை இலக்காகக் கொண்ட மோசடிகளின் ஆபத்தான அதிகரிப்பு குறித்து இலங்கை காவல்துறையின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பிரதானி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தர்ஷிகா குமாரி எச்சரித்துள்ளார்.
“மோசடி செய்பவர்கள் பொதுவாக குறுந்தகவல்களை அனுப்புவதன் மூலம் தகவல்தொடர்பு செயல்முறையைத் ஆரம்பிக்கின்றார்கள், டெலிகிராம் போன்ற நன்கு அறியப்பட்ட செயலிகளை அடிக்கடி பயன்படுத்தி, கவர்ச்சிகரமான வேலை வாய்ப்புகள் குறித்த தகவல்களை பகிர்கிறார்கள். மோசடி செய்பவர்கள் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் பாதிக்கப்பட்டவர்களை தங்கள் வலையில் விழவைக்கின்றார்கள். நெகிழ்வான வேலை நேரத்துடன் வீட்டிலிருந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதாகவும் மற்றும் முன் அனுபவம் தேவையில்லை எனவும் குறிப்பிடுகிறார்கள்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
