புதிய நாடாளுமன்றம் தெரிவாகி ஒரு வருடத்துக்குள் புதிய அரசமைப்பை உருவாக்கி அதனூடாகவே தீர்வைக் காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (21) மாலை நடைபெற்றது.
இதன்போது, இந்திய – இலங்கை ஒப்பந்தம், வடக்கு – கிழக்கு மீளிணைப்பு, அதிகாரப் பகிர்வு, அரசியல் தீர்வு தொடர்பில் தமது நிலைப்பாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எடுத்துரைத்துள்ளார்.
அதற்குப் பதிலளித்த ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டதாக சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
இந்த நாடாளுமன்றத்தில், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் பறிக்கப்பட்ட அதிகாரங்களில் சில அதிகாரங்களை மீண்டும் வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டதாக இரா. சாணக்கியன் கூறியுள்ளார். (tamilwin.com)
