காலிமுகத் திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களினதும் வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 9 ஆம் திகதி ‘அரகலய’ போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் நேற்று (17) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவை நீதவான் பிறப்பித்துள்ளார்.
இதுத் தொடர்பில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்துக்கு அறிவிக்குமாறும் நீதிமன்ற பதிவாளருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அதற்கான கோப்பு சட்ட மா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மிலன் ஜயதிலக்க, சனத் நிஷாந்த மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 36 சந்தேகநபர்களில் 30 பேர் நேற்று திறந்த நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர். (Virakesari)
