திறைசேரிக்கு மூன்று பில்லியன் ரூபாயை வழங்கிய லிட்ரோ

லிட்ரோ எரிவாயு நிறுவனம் 2023ஆம் ஆண்டில் இலாபமாகப் பெற்றுக்கொண்ட மேலும் 1.5 பில்லியன் ரூபா நிதியை திறைசேரிக்கு வழங்கியுள்ளது.

லிட்ரோ நிறுவனத்தின் தாய் நிறுவனமான இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்திடம் இதற்கான காசோலை இன்று (26) ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது.

குறித்த காசோலையை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

இதன்பின்னர், குறித்த காசோலையை இலங்கை காப்புறுதி நிறுவனத்தின் பிரதம நிதி அதிகாரி ஸ்ரீயானி குலசிங்கவிடம், சாகல ரத்நாயக்க கையளித்தார்.

நாடு பொருளாதார நெருக்கடியில் இருந்த போதும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலுடனும் சாகல ரத்நாயக்கவின் ஒத்துழைப்புடனும் லிட்ரோ எரிவாயு நிறுவனம் வளர்ச்சியை எட்டியுள்ளதாகவும், அதன் பயனை மீண்டும் அரசாங்கத்திற்கு பெற்றுக்கொடுக்க முடிந்துள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதன்போது தெரிவித்தார்.

லிட்ரோ நிறுவனம் 2023 ஆம் ஆண்டில் மாத்திரம் மூன்று பில்லியன் ரூபாவை இலாபத் தொகையாக திறைசேரிக்கு அனுப்பியுள்ளதாக முதித பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

Latest articles

Similar articles